கோவை மாநகராட்சியில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை அரங்கில் வைப்பது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியின் சாதாரண மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் விக்டோரியா ஹால் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியபோது அரங்கில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும் அரங்கில் வைக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதேநேரத்தில், பெருந்தலைவர் காமராஜரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் எதிராக முழக்கமிட்டதால் கூட்ட அரங்கில் பதற்றமான சூழல் நிலவியது.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்திற்குப் பிறகு, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலையிட்டு, அரசாணையின்படி முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை வைக்க அனுமதி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் புகைப்படம் மேயரின் மேசை அருகே வைக்கப்பட்டது.

இதற்கிடையில், காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபாலன், காமராஜரை அவமதிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டியதுடன், இந்த விவகாரத்தை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக தெரிவித்தார்.

மறுபுறம், மாநகராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணிகள் மற்றும் குப்பை அகற்றும் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும், மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனால் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் முழுவதும் அரசியல் மோதல் மற்றும் குற்றச்சாட்டுகளால் பரபரப்பாக நடைபெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version