தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக எழுந்த புகார்களுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்துள்ள நிலையில், தன்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் முடக்கி வைக்கும் நோக்கில் இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில் மத்திய அரசு அச்சுறுத்துவதாக செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருமான வரித்துறை இந்தப் புகார்களை முற்றிலும் நிராகரித்துள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், செல்வப்பெருந்தகை குடியிருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்திலோ அல்லது அவருக்குத் தொடர்புடைய பிற இடங்களிலோ எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் அவரைத் தடுத்ததாகக் கூறப்படும் தகவல்களும் உண்மைக்கு மாறானவை என அந்தத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், செல்வப்பெருந்தகை தனது பதிவில், ஜனநாயக நடைமுறைகளைச் சிதைக்கவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கவும் மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தீவிரமான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்திருந்த செல்வப்பெருந்தகை, தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சட்ட அமலாக்கம் கிடையாது என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். சுதந்திரமான நடமாட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஒருபுறம் காங்கிரஸ் தரப்பு முடக்கப்படுவதாகக் குற்றம்சாட்ட, மறுபுறம் வருமான வரித்துறை சோதனையே நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இந்த முரண்பாடான தகவல்கள் தேர்தல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
