கடந்த மாதம் சமையல் எரிவாயு (LPG) பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதத்தில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு சுமார் 13% குறைந்துள்ளது. புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாதத்தில் 23 லட்சத்து 79,000 டன் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டான 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 27 லட்சத்து 29,000 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ள அதே வேளையில், வாகன எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை 7.6% மற்றும் டீசல் விற்பனை 8.1% அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து தேவைகள் அதிகரித்துள்ளதைக் காட்டினாலும், சமையல் கேஸ் பயன்பாடு குறைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முக்கியக் காரணமாக, நாடு முழுவதும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சிலிண்டர் முன்பதிவு  செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களே முன்வைக்கப்படுகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, நுகர்வோர் சிலிண்டர் முன்பதிவு செய்தும் டெலிவரி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களே பயன்பாடு குறைய முக்கியக் காரணியாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது எரிபொருள் விநியோகம் சீராகி வருவதால் வரும் மாதங்களில் பயன்பாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் இந்த மாறுபட்ட விற்பனை நிலவரத்தை மத்திய அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சிலிண்டர் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் அதை சரிசெய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 5 கிலோ சமையல் சிலிண்டர் விற்பனையை துரிதப்படுத்தியுள்ளது. அதற்கான பயன்பாடும் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 5 கிலோ சமையல் சிலிண்டர் வாங்குவதற்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த வகை சிலிண்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இருப்பினும் சராசரி குடும்பத்துக்கு இந்த சிலிண்டர் போதுமானதாக இருக்காது. 5 கிலோ சிலிண்டர்கள் கிடைத்தாலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான விநியோகம் அதிகரித்து தட்டுப்பாடு குறைந்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும். பல இடங்களில் சிலிண்டர் கருப்புச் சந்தை பிரச்சினையும் இருக்கிறது. பலர் அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்யும் புகார்களும் உள்ளன. அதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version