ஒடிசா மாநிலத்தில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, மிகக் குறுகிய கால இடைவெளியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ரூர்கேலா – குனுபூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் சென்று கொண்டிருந்தபோதே அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு நிலைமை கவலைக்கிடமானது. இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக ‘ரயில் மதத்’ (Rail Madad) செயலி மூலமாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், அவசர மருத்துவ உதவிக்காக கட்டாக் இரயில் நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், ரயில் நிலையத்தை வந்தடைவதற்கு முன்பாகவே, நகரும் ரயிலுக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து ரயில் கட்டாக் நிலையத்தை வந்தடைந்ததும், ஆர்பிஎஃப் காவலர்கள் பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மருந்தாளுநர் தானாக முன்வந்து தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான முதலுதவிகளைச் செய்தார்.

அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருந்ததால், அடுத்த குழந்தையைத் பெற்றெடுப்பதற்கான பிரசவ வலி மீண்டும் தீவிரமடைந்தது. இதனால், அவரை உடனடியாக ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே ஆம்புலன்ஸ் பயணத்தின்போது அவருக்கு மீண்டும் பிரசவம் நடந்து, இரண்டாவது குழந்தையும் ஆம்புலன்ஸிலேயே பிறந்தது. தற்போது தாயும், இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவாலான சூழ்நிலையிலும் சாதுரியமாகச் செயல்பட்டு உதவிய இரயில்வே அதிகாரிகள், அவசர மருத்துவக் குழுவினர் மற்றும் சக பயணிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version