தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையானது படிப்படியாக உயர்த்தப்பட்டது. விலை உயர்வுக்கு முன்பாகவே, மக்கள் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், போது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி சூசகமாக அறிவுரை கூறியிருந்தார். அதன்படி, இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வரக்கூடிய நிலையில், 14-ம் தேதி வரை 100.84ஆக இருந்த பெட்ரோல் விலையை 15-ம் தேதி அதிரடியாக ரூ.2.83 உயர்த்தியது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறிது சிறிதாக பெட்ரோல், டீசல் விலையானது உயர்த்தப்பட்டது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் ஹர்மூஸ் நீர்முனை விவகாரம் என கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததன் விளைவாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டது.
கடந்த 27ம் தேதி சென்னையில் ரூ.0.19காசுகள் அதிகரித்து ரூ.108.20க்கு விற்பனையான பெட்ரோல் விலை, நேற்று ரூ.0.43காசுகள் குறைக்கப்பட்டு ரூ.107.77க்கு விற்பனையானது. தொடர்ந்து இன்று மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.24 காசுகள் அதிகரித்து ரூ.108.01க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.0.23காசுகள் அதிகரித்து ரூ.99.78க்கும் விற்பனையாகிறது.
கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.36ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.59ம் அதிகரித்திருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
