குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைப்பேசி உரையாடல்கள், தகவல்களை ஒட்டுக்கேட்ட சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம், 2011 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கிஷோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சட்டப்படி நியாயப்படுத்தாத வரை, தனி நபரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது என்பதால், குற்றச் செயல்களை கண்டறிவதற்காக ரகசியமாக ஒட்டுக்கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனக் கூறி, கிஷோரின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் வழங்கி உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், பொது பாதுகாப்பு மற்றும் பொது அவசரம் காரணாமாக மட்டும் தனி நபர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது அமைதி, குற்றசெயல்களை தடுப்பது போன்ற நிகழ்வுகளில் மட்டும் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அனுமதியளிக்க முடியும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கில், பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதும் சம்பந்தப்படவில்லை எனக் கூறி, உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.