தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசாருக்குத் தமிழக டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் மிக முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் அறைக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்யவும், வாக்காளர்கள் எவ்வித தயக்கமுமின்றி தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவுமே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையத்தின் தலைமை அலுவலர் (Presiding Officer) ஏதேனும் அவசரத் தேவைக்காக அழைத்தால் மட்டுமே காவலர்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் நுழைவாயில் பகுதியிலேயே நின்று தங்களது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் இது குறித்து வாக்கிடாக்கி மூலம் அவசரத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. வாக்காளர்களின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்கவும், காவல்துறையின் தலையீடு ஏதுமின்றி தேர்தல் நடப்பதை உறுதி செய்யவும் இந்த உத்தரவு பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
