தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் வீடுகள் பட்டியலிடும் பணிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையவழியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ (Self-Enumeration) முறை வருகிற ஜூலை 17 அன்று தொடங்கி ஜூலை 31  வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

சுய-கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, களப்பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் ‘வீடுகள் பட்டியலிடும் பணி’ (House Listing Operations) வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை 30 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இந்த முதற்கட்ட பணிகள் இந்தியா முழுவதும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான தேதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்புப் பணிக்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் 33 கேள்விகள் அடங்கிய வினாப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் வீட்டின் எண், கட்டிடம் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குடும்பத் தலைவரின் விவரங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பயன்படுத்தப்படும் சமையல் எரிபொருள், வீட்டில் உள்ள வாகனங்கள் (மிதிவண்டி, கார், இருசக்கர வாகனம்), இணையதள வசதி மற்றும் பயன்படுத்தும் உணவு தானியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தொடர்புக்கு மட்டும் பொதுமக்களின் கைபேசி எண்களும் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version