தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய கடும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெப்ப அலை மற்றும் கடுமையான உஷ்ணம் காரணமாக, மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களிலும், பெற்றோர்கள் மத்தியிலும் வலுத்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் மாறவில்லை என்றும் வானிலை மாற்றங்கள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதகாவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை வெப்பநிலை அபாயகரமான நிலையை எட்டினால், மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பது குறித்து அரசு உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதும் மாணவர்களின் நலன் கருதி அரசு துரிதமான முடிவை எடுக்க வேண்டும் என்பதும் பெரும்பாலான பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version