கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘மாசப்பாடி’ (Masapadi) என்று அழைக்கப்படும் சி.எம்.ஆர்.எல் (CMRL) நிதிப் பரிவர்த்தனை முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், CMRL நிறுவன மேலாண் இயக்குநர் சசிதரன் கர்த்தா மற்றும் கேரள முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோரின் இடங்களிலும் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டது. பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனம், எவ்வித சேவைகளும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.1.72 கோடி பெற்றதாக எழுந்த புகாரை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குக் கேரள உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிய அடுத்த நாளே இச்சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் நடந்துள்ள இந்த அமலாக்கத்துறை சோதனைக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
https://x.com/mkstalin/status/2059524990614274331?s=48&t=GFjjvF36aD9yw7prYzqt7g
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனை இலக்கு வைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பாரதிய ஜனதா அரசு ஆயுதமாகப் பயன்படுத்துவதை இந்த நடவடிக்கை மீண்டும் பறைசாற்றுகிறது.
மேலும், ‘பினராயி விஜயனை ஏன் பாஜக இன்னும் குறிவைக்கவில்லை?’ என்று நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் போலித்தனத்தையும் இந்தச் சோதனை தற்பொழுது வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.”
முன்னதாக, தங்கள் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விசாரணை நடத்தப்படுவதாகப் பினராயி விஜயன் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது. இந்தச் சூழலில், ஈடி சோதனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவதால் கேரளா மற்றும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
