தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மிகவும் வினோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வேளாண்மைத் துறையுடன் இணைந்து விவசாயிகளிடையே இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது வயலில், 100% என்ற வடிவத்தில் நெல் நாற்றுகளை நட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.
விவசாயப் பணிகளுக்கு இடையே உழவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை மறக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்த விவசாயிகளிடம் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
