ராமதாஸ்- சசிகலா கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த பாமக எம்.எல்.ஏ. அருள் திமுகவில் இணையவிருப்பதாக பேசப்பட்ட நிலையில், வருத்தத்தில் இருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் திமுகவில் இணையும் எண்ணம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலைச் சந்தித்து வருகிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் அதிகார மோதல் காரணமாக, இருவரும் தனித்தனிப் பாதையில் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போதுள்ள அரசியல் சூழலில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கிறது. ஆனால், தனது மகனின் இந்த முடிவை ஏற்காத ராமதாஸ், தனியாக ஒரு பலமான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டார். இதற்காகப் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக சசிகலாவின் ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் கழகத்துடன்’ (AIPTMMK) கூட்டணி அமைப்பதாக அறிவித்தார்.
ராமதாஸின் இந்தத் திடீர் கூட்டணி முடிவு பாமகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் கொள்கைகளுக்கும் நிர்வாகிகளின் விருப்பத்திற்கும் மாறாக, சசிகலாவுடன் கைகோர்த்ததைச் சில முக்கியப் புள்ளிகள் பகிரங்கமாகவே விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, அன்புமணி இருக்கும் கூட்டணியில் இணைய விரும்பாத ராமதாஸ், முதலில் திமுக கூட்டணியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. திமுக தரப்பில் இருந்து உரிய அழைப்பு வராததாலும், காலதாமதம் ஆனதாலும் வேறு வழியின்றி சசிகலாவுடன் கூட்டணி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சூழல் திமுக கூட்டணியை எதிர்பார்த்துக் காத்திருந்த ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த அதிருப்திப் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார். சசிகலாவுடனான கூட்டணி குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர், இந்த முடிவில் தனக்கு வருத்தம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைக்கு திமுகவில் இணையும் எண்ணம் தன்னிடம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அன்புமணியுடனான மோதலில் ராமதாஸை முழுமையாக ஆதரித்த நிர்வாகிகள் கூட, தற்போது சசிகலாவுடன் கூட்டணி என்ற முடிவை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
