திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் மோகித் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவன் மோகித்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், காயம் அடைந்த மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் என அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாட்டோம் என கூறி காவல் துறையினருடன் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதே சமயம், மாணவரின் உறவினர்கள் சிலர் பள்ளி அருகே கூடி, ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளி கட்டடத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் அவர்களிடம் உறுதி அளித்துள்ளனர்.
பள்ளிக் கட்டடத்தின் கைப்படி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
