கோடை விடுமுறை முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜய் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கியத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் என்பதால், இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக 4 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படியில், தமிழகத்தில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது. தேர்வு முடிவுகள் வரும் மே 20-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது

மேலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். அரசுப் பள்ளிகளின் தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை விழுக்காடு மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

புதிய கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று, அண்மையில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜ்மோகனுடன், முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் இதுவாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பள்ளிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ தேதி மற்றும் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version