தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்ததைத் தொடர்ந்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அமைச்சர்களின் அறைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அகற்றப்பட்டு வருகின்றன.

அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்த திமுக தொடர்பான கட்சிச் சின்னங்கள், முந்தைய ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பதாகைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய அரசியல் சக்தியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள நிலையில், அதற்கேற்ப தலைமைச் செயலகத்தின் தோற்றமே மாறி வருகிறது. அமைச்சர்கள் பயன்படுத்தி வந்த அறைகளில் இருந்த பழைய கோப்புகள் மற்றும் தளவாடப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அலுவலகங்கள் அனைத்தும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் தற்போது காலியாகத் தொடங்கியுள்ளன. திமுக அமைச்சர்களாகப் பணியாற்றியவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு அறைகளைக் காலி செய்ததைத் தொடர்ந்து, அந்த இடங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. புதியதாகப் பொறுப்பேற்கவுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அமர்வதற்கு ஏதுவாக, இந்த அறைகளைச் சீரமைக்கும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதிய அரசின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, பதவியேற்பு விழா முடிந்தவுடன், புதிய அமைச்சர்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் புகைப்படங்கள் அந்தந்த அறைகளில் இடம்பெறவுள்ளன. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், தலைமைச் செயலகம் ஒரு புதிய வரலாற்று அத்தியாயத்திற்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version