சென்னையில் இன்று (மே 19) அதிகாலை முதலே அமலாக்கத்துறை  அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ரூ.300 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரங்கள் தொடர்பாகவும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் பிரபல பைனான்சியர் குல்னஸ் பேகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த ரெய்டு துவங்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் லக்ஷ்மணசாமி என்பவரது இல்லம், அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான இடங்கள் என நகரின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களிலும் இந்த சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வங்கி அதிகாரிகளின் துணையோடு இந்த மோசடி நடந்ததா மற்றும் மோசடி செய்யப்பட்ட பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற பல்வேறு கோணங்களில், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த அதிகாலை நேரத்து திடீர் ரெய்டு சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version