திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் குற்றங்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. முதலியார் சத்திரம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த விவகாரத்தில் 7 சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் செல்ல அடம் பிடித்து மறுத்ததால், அவர் தற்காலிகமாக அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
காப்பகத்தில் இருந்த போது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் அந்தச் சிறுமி அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினர் கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் விரிவான விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்தனர்.
மகளிர் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் என மொத்தம் 9 பேர் சேர்ந்து அந்தச் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது. உடனடியாக போலீஸார் 9 பேரையும் கைது செய்து சிறார்ப்பள்ளி மற்றும் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருநங்கை ஒருவரின் தங்கை கடத்தப்பட்டு, கார் ஓட்டுநர் ஒருவரால் மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீதியில் தூக்கி வீசப்பட்ட கொடூரம் திருச்சியில் அரங்கேறியது. அத்துடன் அந்தப் பெண்ணை பல்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மது கொடுத்து சீரழித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வருகின்றன.
“ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெண்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படும்” என தேர்தல் மேடைகளில் உறுதியளித்த முதலமைச்சர், தற்போது மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
