தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, ஆளுநர் அர்லேகர் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய், தன்னைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து ஒரு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ஆதரவு கடிதத்துடன் நேரில் வருமாறு விஜய்க்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியார் ஊடகத்திற்கு ஆளுநர் அளித்த பேட்டியில், தவெக தரப்பில் உரிமை கோரப்பட்டாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்சியமைக்க இதுவரை தான் அழைப்பு விடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக, ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநரின் இந்த கண்டிப்பான நிலைப்பாடு விஜய்க்குச் சற்று பின்னடைவாகவும் அதேசமயம் சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

ஆளுநரின் இந்த நிபந்தனையை அடுத்து, தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியமைக்க தவெக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக காங்கிரஸ், பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் தவெக நிர்வாகிகள் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்க முன்வந்துள்ள நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவையும் திரட்டி, பெரும்பான்மை பலத்துடன் ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சராகப் பதவியேற்க விஜய் திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருக்கு இரண்டாவது கடிதம் தவெக தலைவர் விஜய் அனுப்பி உள்ளார். ஆளுநரின் அறிவுறுத்தலை ஏற்று முழுமையான விவரங்கள் அடங்கிய தகவல்களுடன் மீண்டும் விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version