திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சிகளின் குரல்கள் ஆவப்போது திடீர் திடீரென வலுத்து வருகின்றன. அந்த வரிசையில் விசிகவும் ‘ஆட்சியில் பங்கு’ என குரலெழுப்பியதெல்லாம் ஒரு காலம். தற்போது ‘இரண்டு இலக்கத்தில் தொகுதி’ என்பது இப்போதைய குரலாக இருந்து வருகிறது. ஆனால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தற்போது ஒருவித அமைதி, மவுனம் திருமாவிடம் தென்படுகிறது, ராமதாஸ் பாமகவுக்கு எதிரான குரலை தவிர. அந்த மவுனத்தின் பின்னணி பற்றி ஒரு தகவல் தற்போது பேசப்படுகிறது. அதைப்பற்றி இங்கு காணலாம்.

சமீப நாட்களாக திருமாவளவன் அவர்கள் அடிக்கடி பேசி வரும் இரண்டு விஷயங்கள், “நிச்சயமாக பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்” என்பதும் “இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் கேட்டுப்பெற வேண்டுமென்பது எண்ணம்” என்பதும் தான். அனால், அதில் இரண்டாவது குரல் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறதோ? என்ற உணர்வு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட அதற்கு காரணம் உடனிருக்கும் சில சிறுத்தைகள் தான் என்ற தகவலும் கிடைக்கிறது.

அதாவது, “திமுக தரும் தொகுதிகளை மட்டும் வாங்கி கொள்ளலாம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் அக்கட்சின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விசிக தலைமை அலுவலக வட்டாரத்தில் பேசப்படுவது என்னவென்றால், “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகளை மட்டுமே திமுக வழங்கியது. கடந்த லோக்சபா தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று கட்சி வளர்ந்திருக்கிறது.

அப்படி இருக்கும்போது, வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை வாங்க வேண்டும் என்பது தான் வி.சி., நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது. அதைத்தான் திருமாவளனும் திமுகவிடம் கேட்கிறார். ஆனால் அதனை தர மறுக்கும் திமுகவோ தங்களுக்கு நெருக்கமான விசிக நிர்வாகிகளை வைத்தே திருமாவளனுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கிறது. குறிப்பாக விசிக எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பாபு, எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் திமுகவுடன் நெருக்கமாக இருந்துகொண்டு முதல்வரோடும் மூத்த அமைச்சர்களுடனும் அன்றாடம் உறவாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், அவர்களுக்கு தேவையானதை ஆட்சியாளர்கள் வாயிலாக பெறுகின்றனர். இதனால் அவர்கள் விசிகவினர் என்பதையே மறந்து திமுகவினராகவே மாறி விட்டனர். ஏற்கனவே ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு குடைச்சல் கொடுத்த ஆதவ் அர்ஜீனாவை இந்த நிர்வாகிகளை வைத்து தான் விசிகவிலிருந்து திமுக வெளியேற்றியது. அதேபோல தற்போது தொகுதிப்பங்கீட்டில் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் திருமாவளனுக்கு, “6 அல்லது 8 தொகுதிகளே நமக்கு போதும். திமுக என்ன கொடுக்கிறதோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம்” என அவரது கட்சியில் உள்ள மேற்கூறிய நிர்வாகிகளை வைத்தே திமுக அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது என அந்த தகவல் தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, பாமக நிறுவனர் ராமதாசை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர தடை போடும் திருமாவளனுக்கு அவ்விவகாரத்திலும் இதே நிர்வாகிகளை வைத்தே நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம். ஓரிடத்தில் அவர் பேசும்போது, “நானே ஒப்புக்கொண்டாலும் கட்சியினர், தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” என்பது போல பேசியிருப்பார். அந்த “நானே ஒப்புக்கொண்டாலும்..” என்ற வார்த்தையின் வெளிப்பாடு, திமுக தனித்து கொடுத்த அழுத்தமல்ல, உடனிருக்கும் சிறுத்தைகள் கொடுத்த அழுத்தத்தின் வெளிப்பாடாக தெறித்து விழுந்த வார்த்தைகள் எனவே உணர முடிகிறது. இதில் கூடுதல் ஒரு தகவலாக தெரியவருவது, ஒருவேளை திருமாவளன் தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்கவும் திமுக தயங்காது என்பது தான்.

ஒருபுறம், “ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கிற திருமாவளவன் அதிகார மட்டத்தில் முன்னேறாமல் இருக்கிறாரே?; உரக்க கண்டிக்காமல் பின்வாங்குகிறாரே?” என எளிதாக விமர்சித்து விட்டு போகும் சூழலில், உண்மையில் உடனிருப்பவர்களே இவ்வாறு நெருக்கடி கொடுப்பது என்பது பற்றி விமர்சிப்பவர்கள் அறிய தவறிவிடும் புரிதலாக இருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version