தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27, 2026) அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தனது மகன் ரவீந்திரநாத் குமாருடன் அவர் இணைந்தது, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தாய் கழகத்திற்கே திரும்பிவிட்டேன்” என ஓபிஎஸ் உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்த நிலையில், அவருக்கு வழங்கப்படப்போகும் முக்கியப் பொறுப்பு குறித்து அறிவாலய வட்டாரத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் போன்ற உயரிய பதவிகளை வகித்த அனுபவம் கொண்ட ஓபிஎஸ்-க்கு, திமுகவில் அவரது தகுதிக்கு இணையான கௌரவமான பொறுப்பை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார். முதற்கட்டமாக, அவருக்கு திமுகவின் ‘துணை பொதுச்செயலாளர்’ பதவி வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தெற்கு மாவட்டங்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளைத் தக்கவைக்க ஓபிஎஸ்-ஸின் வரவு திமுகவிற்குப் பெரும் பலமாக அமையும் என்பதால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்க ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஓபிஎஸ்-க்கு ‘சட்டமன்ற சபாநாயகர்’ பதவியை வழங்க ஸ்டாலின் ரகசியமாக முடிவு செய்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. அரசியல் அனுபவம் மிக்கவர் மற்றும் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாகச் செயல்படக்கூடியவர் என்பதால், சபாநாயகர் இருக்கையில் ஓபிஎஸ்-ஐ அமர வைப்பது சரியாக இருக்கும் என ஸ்டாலின் கருதுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு, சட்டமன்றத்தை வழிநடத்தும் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டதாக அமையும் என்று ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version