எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என் டி ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக உருவான தினத்தை முன்னிட்டு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “13.4 கோடி பாஜக காரியகர்தாக்களுக்கு எனது சார்பில் பாஜக துவங்கிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1980 ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டது, தொடங்கிய காலத்தில் இருந்து பல முயற்சிகளால் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக. கடந்த ஐந்தாண்டுகள் தமிழ்நாடு அரசின் தோல்வியால் மணல் கொள்ளை, சாராய ஊழல், துறைகளில் ஊழல், பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்குவது என மோசமான ஆட்சி நிலவியது.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் கனிமொழி தான் திமுக, அவர்களைத் தவிர திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது. குடும்ப ஆட்சி, ஊழல், நிர்வாக மேலாண்மை இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி இருந்துள்ளது. வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என் டி ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று பேசினார்.
