தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே தனது அதிரடி ஆக்ஷனைத் தொடங்கியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக தங்களது துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் உள்பட மொத்தம் 10 பேர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, நேற்று அவர்களுக்கான அமைச்சரவை இலாகாக்கள் (துறைகள்) அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன. இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி முடுக்கிவிடுவதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் இறங்கியுள்ளார்.
அந்தவகையில், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்தத் துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் துறை வாரியான தற்போதைய திட்டங்களின் நிலவரங்களை ஆராய்ந்து, பணிகளை உடனே முடுக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருபுறம் பொறுப்பேற்ற அமைச்சர்களைக் கொண்டு நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தும் அதே வேளையில், தற்போதைய அமைச்சரவையை விரிவுபடுத்துவது குறித்தும் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
