சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய வழக்குகளை முடிப்பதற்கான காலக்கெடு குறித்துப் போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அனைத்து விதமான மதுக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆணையர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அந்தவகையில், டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 (பார் மற்றும் நட்சத்திர விடுதிகள்) கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். கால நேரத்தை மீறிச் செயல்படக் கூடாது.
இந்த விதிமுறைகள் ஏதேனும் ஒரு பகுதியில் மீறப்படுவது கண்டறியப்பட்டால், அந்தந்தப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் இருக்கும் ரோந்து போலீசார் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
மேலும், வழக்குகளை இழுத்தடிக்காமல் விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரும் வகையில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதியப்படும் வழக்குகள், எக்காரணம் கொண்டும் 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது. அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். இதேபோல் சென்னையில் பதிவாகும் கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் 90 நாட்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது எனப் போலீசாருக்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. ப்பு
போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தரவும் தீவிர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தகுந்த தண்டனை கிடைப்பதை போலீசார் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். காவல் துறையின் சிறப்புப் பிரிவுகளான ‘சிங்கப்பெண்’ மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின் தினசரி செயல்பாடுகளை அதிகாரிகள் முறையாகக் கண்காணித்து வழிநடத்த வேண்டும்.
தலைநகரில் குற்றங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவுகள், காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

