கோவையில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்டதால் 40-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்றைய முன்தினம் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவு வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அடுத்து சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளனர். சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதித்து முதலுதவி சிகிசை அளித்தனர். மறுபுறம் மாணவர்கள் சாப்பிட்ட உணவை பரிசோதிக்கும் போது சாம்பாரில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் மருத்துவக் குழுவினரும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் மற்றும் 13 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இத்தகவல் கேட்டதும் பதறியடித்து பள்ளியில் குவிந்த பெற்றோர்களை உள் அனுமதிக்காததால் அவர்கள் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மருத்துவமனைக்கு சென்று தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் பார்த்துக்கொண்டனர். அதேபோல் மாநகராட்சி அதிகாரிகளும் அதிமுகவினரும் மாணவ, மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இது குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்? 2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், “சாம்பார் டேஸ்ட் எப்படி?” என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?” என கடுமையாக சாடியுள்ளார்.

இத்தகைய சூழலில் சமூக வலைத்தளங்களில் மேலும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதே போன்ற தரமற்ற மதிய உணவால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவம் எத்தனை நடந்துள்ளது? அதனால் எத்தனை மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டார்கள்? என்பது தொடர்பான அத்தகவலில், “பிப்ரவரி 2025ல் தருமபுரியில் 7 மாணவர்களுக்கு சிகிச்சை, ஜூன் 2025 கடலூரில் 3 மாணவர்களுக்கு சிகிச்சை, ஆகஸ்ட் 2025ல் ஓசூரில் 3 மாணவர்களுக்கு சிகிச்சை, அதே ஆகஸ்ட் 2025ல் மீண்டும் ஓசூரில் 22 மாணவர்களுக்கு சிகிச்சை, செப்டம்பர் 2025ல் கள்ளக்குறிச்சியில் 47 மாணவர்களுக்கு சிகிச்சை, பிப்ரவரி 2026ல் தஞ்சாவூரில் 15 மாணவர்களுக்கு சிகிச்சை, தற்போது மார்ச் 2026ல் கோவையில் 43 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய இந்த சம்பவத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுவரை மாணவர்களை நேரில் பார்க்காமல் இருப்பதும், சம்பந்தப்பட்ட பள்ளியிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதும், இவ்விவகாரம் தொடர்பாக தற்போது வரை ஒரு விளக்கம் கூட அளிக்காமல் இருப்பதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version