தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட்- 5ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2026-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-, 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் அவர்கள் ‘நாள்’ குறித்துள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர்,

அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவித்தார்.

மறுநாள் அதாவது ஆகஸ்ட் 6ஆ-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் போது, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சபாநாயகர் பதில் அளித்து கூறியதவது;-

தவெகவுக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் வகையில் நிதிநிலை இருக்கும் என நான் நம்புகிறேன்.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு,  பேரவைத் தலைவரைக் கேட்டுவிட்டுத்தான் எம்.எல்.ஏவை கைது செய்யவேண்டும் என பேரவை விதி எதுவும் இல்லை.

பேரவைக்கு வெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் பேரவைத் தலைவர் எப்படி ஈடுபடலாம் என்னும் விதி உள்ளது. விதி எண் 291, 292 ஆகியவற்றின்படி,  பேரவைத் தலைவரின் அனுமதியின்றி எவரையும் பேரவையின் அமைப்பு எல்லைக்குள் கைது செய்யக் கூடாது.

அதேபோல் உரிமையியல் நீதிமன்றத்தின் கட்டளையையோ அல்லது அறிவிப்பையோ பேரவைத் தலைவரின் முன் அனுமதியின்றி பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பிக்கக் கூடாது.

பேரவையின் அமைப்பு எல்லை என்பது, பேரவை மண்டபம், அதன் புறக்கூடங்கள்,  அதனைச் சார்ந்த அலுவலகங்கள்,  அமைச்சர்களின் அறைகள்,  நூலகம், சிற்றுண்டி சாலை, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற குழுக்கள் கூடும் அறை, அண்ணாசாலை அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள குழுக்கள் கூடும் அறை,  நூலகம், மற்றும் பேரவைத் தலைவரால் அவ்வப்போது கூறப்படும் இடங்கள், கட்டிடங்கள் எல்லாம் பொருந்தும்.

எம்.எல்.ஏ பேசிய பேச்சு மக்களிடையே கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதை ஊடகத்தின் வாயிலாக அறியமுடிந்தது. நியாய உணர்வுள்ள யாரும் இதனை சரியென்று சொல்ல மாட்டார்கள்.

இந்த விஷயம் குறித்து பேரவைத்தலைவரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் எந்தக் காலக்கட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நான் முடிவெடுப்பேன்.

பேரவைக்குள் என்ன செய்வேன் என, பேரவையின் மாண்பினை குலைக்கும் வகையில் உறுப்பினர் பேசியிருப்பது குறித்து எழுத்துப்பூர்வமாக எனக்கு புகார் அளிக்கப்பட்டால் நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version