தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், தற்பொழுது சமூக வலைதளங்களில் ‘ஆற்காடு சீதாராமையர் பஞ்சாங்கம்’ குறித்த கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கத்தில், 2026-ம் ஆண்டு உலகளாவிய அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும், குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கணிப்பின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான வெற்றி கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆட்சி முடிவுக்கு வந்து, பல்வேறு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் ‘கூட்டணி ஆட்சி’ அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்களிடையே இது கலக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அறிவியல் ரீதியாகத் தேர்தலை அணுகும் இக்காலத்தில், பாரம்பரிய பஞ்சாங்கக் கணிப்புகளும் ஒருபுறம் பேசுபொருளாகி வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தக் கணிப்புகள் நிஜமாகுமா அல்லது மக்களின் தீர்ப்பு வேறாக இருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கணிப்புகள் ஜெயிக்குமா அல்லது பொய்யாகுமா என்ற கேள்விக்கான விடையைப் பெற, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நாம் காத்திருப்போம்.
