பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி, கடந்த 22 ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக், STFI உள்ளிட்ட கூட்டமைப்புகளும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தனிச்சங்கங்களும் தொடர்ந்து களத்தில் இறங்கி இடையறாது போராடி வந்தன. அந்தப் போராட்டங்களின் விளைவாக கடந்த ஜன.3 தேதி புத்தாண்டு பரிசாக, “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)” என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6,75,000 அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட’த்தின் படி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீத தொகை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழக்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த நிலையில் ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
