தவெகவில் வேட்பாளர் பட்டியல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீட் விவகாரத்தில் முரண்பாடு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026க்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக ,அதிமுக ,நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவு உள்ளது.
இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக அரசியல் களத்தில் தேர்தலை சந்திக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மக்களிடையே நடிகராகவே பார்க்கப்பட்டு வந்த விஜய், முதன் முறையாக அரசியல் களத்தில் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் முதன்மை சக்தியாக உருவெடுத்து வருகிறது. தேர்தல் முன்னெடுப்பு நடவடிக்கையாக விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பரப்புரையை திருச்சியில் தொடங்கினார்.
தொடர்ந்து சனிக்கிழமை தோறும் மாவட்டம் வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்த நிலையில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையை போட்டது. இதனால் விஜயின் அரசியல் நகர்வுகள் மந்தமானது. ஒரு புறம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தனது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளார்.
அந்தவகையில், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரையை நிகழ்த்தி வருகிறார். இருப்பினும் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் யார் சரியான நபர் ஆய்வு செய்து வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் அக்கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், தேர்தலையொட்டி தவெக தனது கட்சி அலுவலகத்தில் விருப்பமனு வழங்கும் பணியை சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். காணொளி காட்சி மூலம் நடந்த மா.செக்கள் கூட்டத்தில் பேசிய ஆனந்த், பட்டியலில் மா.செக்கள் பெயர் இல்லையென்றால் யாரும் வருத்தப்படக்கூடாது என தெரிவித்திருந்தார். இது நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தவெகவில் 90% வேட்பாளர் பட்டியல் இறுதியானதாகவும் கூறப்படுகிறது. ஆனால் புஸ்ஸீ ஆனந்தின் இந்த பேச்சால், 30-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் கொங்கு, வடக்கு மண்டலத்தில் 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைய தூதுவிட்டுள்ளனராம். அவர்களிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி இசைவு கூறியுள்ள விவகாரம் விஜய் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
