தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் 4 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது குழந்தைகளை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி-க்கு குழந்தைகள் நல ஆணையம் அதிரடி பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி, குழந்தைகளை அரசியல் செல்வாக்கு செலுத்துபவர்களாக மாற்றியதாக விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பரப்புரையின் போது, “குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அடம் பிடித்தாவது தவெக-வுக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்” என விஜய் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரை மிரட்டுவது போன்றும், அழுவது போன்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் செயல் என்றும், அவர்களைத் தேர்தல் ஆதாயத்திற்காகத் தூண்டிவிடுவதாகவும் குழந்தைகள் உரிமைக் காப்பக அமைப்புகள் (TNCRW) கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில், சிறார் நீதிச் சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் விஜய் மற்றும் அவரது கட்சியின் பிரச்சாரப் பிரிவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய அந்த வீடியோக்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் விதிமீறல் தொடர்பாகச் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போதைய இந்த ‘குழந்தைகள் நல’ புகார் விஜய் தரப்பிற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version