திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர் ஒருவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிகப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், மருந்துகள், உட்கட்டமைப்புகள் சரியானதாக இல்லை என மக்கள் புலம்பும் நிலையில், இப்படி அலட்சியமாக தூய்மை பணியாளர் ஊசிகளை கையாள்வது மக்களின் உயிருடன் விளையாடும் செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
