தமிழகத்தில் புனித ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது. இஸ்லாமிய மாதமான ரம்ஜான் மாத பிறை பார்த்து நோன்பு தொடங்குவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் ரம்ஜான் பிறை நேற்று இரவு காணப்பட்டது. இதனால் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அன்பார்ந்த இஸ்லாமியப் பெருமக்களே. அஸ்ஸலாமு அலைக்கும். 18-02-2026 மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை (இன்று , 19-02-2026) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாகத் தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் பாகவி. மழாஹிரி காஸிமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இரவு முதல் பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளும் அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புனித ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கியது. பள்ளிவாசல்களில் நடைபெற்ற தராவீஹ் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
