நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை (ஜனவரி 9 ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, கே. வி. என் புரொடக்சன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதி பி.டீ ஆஷா முன் நடைப்பெற்ற வந்தது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் புகார் அளித்திருப்பதால் படத்திற்கு சென்சார் சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புகார் இருந்தால் திரைப்படத்தை மறு தணிக்கை செய்வதற்கு தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், சென்சார் சான்று வழங்கும் முன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், தணிக்கை குழுவின் இடம்பெற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் முடிவை எடுத்துக் கொள்ளாமல் ஒரே ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்சார் சான்று நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்றும் 500 கோடி முதலீட்டில் உருவாக்கி உள்ள திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இதன் காரணமாக நாளை (ஜனவரி 9 ம் தேதி) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் வெளியிட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version