நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் தள்ளிப்போய் வந்தது. இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முழுத் திரைப்படமும் HD பதிப்பில் இணையதளங்களில் கசிந்துள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் லீக் செய்தியால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசிந்த காட்சிகளையோ அல்லது படத்தையோ பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்தத் திருட்டுத்தனமானச் செயலுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், படம் லீக் ஆனதற்குத் தமிழக அரசும் (திமுக), பாஜக-வுமே காரணம் என ஆதவ் அர்ஜுனா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலினே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் கசிந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து தான் எவ்வித கருத்தும் பேச விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரித்தார் முதலமைச்சர். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ஜனநாயகன் படம் ஆன்லைனில் லீக்காகியிருக்கிறது அதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க, ‘இதை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்றார். அதனையடுத்து, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததற்கு உதயநிதிதான் காரணம் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்கிறார் என்று கேட்க, ‘அப்படியா?.. எனக்கு தெரியாது. ஆதவ் அர்ஜுனா செய்தியை எல்லாம் நான் படிப்பது இல்லை’ என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகன் பட பிரச்னை ஆரம்பித்ததிலிருந்தே விஜய் ரசிகர்களும், தொண்டர்களும்; ஏன் விஜய்யே கூட திமுகவைதான் காரணம் காட்டினார்கள். மேலும் அனைத்து விஷயங்களிலும் முதலமைச்சரை விஜய் விமர்சித்தாலும்; அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் கொடுத்ததில்லை. இப்போதுதான் விஜய் தொடர்பான விஷயத்தில் முதல்முறையாக நேரடியாக ரியாக்ஷன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
