தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பான சிக்கல்கள் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் ஓடிடி (OTT) உரிமம் தொடர்பான ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் பிரைம் நிறுவனம், இப்படத்தை வாங்குவதற்காக மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே இந்தச் சட்டப்பூர்வமான முடிவை அமேசான் நிறுவனம் எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்தில், ‘ஜன நாயகன்’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை சுமார் ரூ.120 கோடிக்கு வாங்க அமேசான் நிறுவனம் சம்மதித்திருந்தது. இது விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாக  பார்க்கப்பட்டது. இருப்பினும், படத்தின் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் ரிலீஸ் தள்ளிப்போன காரணங்களால், அமேசான் நிறுவனம் அந்தத் தொகையை ரூ.50 கோடியாகக் குறைத்ததாக முன்னதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது படம் கசிந்த விவகாரம் ஒப்பந்த முறிவிற்குக் காரணமாக அமைந்துள்ளதால், படக்குழு பெரும் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, படக்குழுவினர் தற்போது மற்ற முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, ‘Zee5’ நிறுவனத்துடன் டிஜிட்டல் உரிமம் குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த முட்டுக்கட்டைகள் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகி இப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version