பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தமிழீழ விடுதலைப் பாடகரும், பாட்டாளி மக்கள் கட்சியுடன் உறவு கொண்டவருமான பாடகர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி கிராமத்தில் பிறந்த பாடகர் தேனிசை செல்லப்பா அவரது இளம் வயதில் நடிகவேள் எம்.ஆர். இராதா, நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் ஆகியோருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான பாடல்களை பாடி வந்தார்.

பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தேனிசை செல்லப்பாவின் எழுச்சிக் குரல் மீது விருப்பம் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவருக்கு பாசறைப் பாணர் என்று பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் மேடைகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்காக கவிஞர் பங்குனி உத்திரன் எழுதிய பாடலையும் தேனிசை செல்லப்பா பாடியுள்ளார்.

பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version