தை அமாவாசை அன்று செய்யப்படும் தானங்களை நம்முடைய முன்னோர்களே வந்து ஏற்பதாக ஐதீகம். அதனால் அன்னதானம் வழங்குவதுடன் யாருக்கு எந்தெந்த பொருட்களை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும், என்ன செய்தால் முன்னோர்களின் மனம் மகிழ்ச்சி அடையும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகு.

தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம், தானம் இரண்டும் முக்கியமானவை என்றாலும் யார் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை பொருத்து தான் நமக்கு கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் அமையும்.

தை அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்திற்கு பிறகு நீர்நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் புனித நதிகள், கடலில் சென்று நீராடி விட்டு, அந்த நீர் கரையிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம். இது மிகவும் சிறந்ததாகும். பிறகு வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வழக்கமான வழிபாட்டினை செய்ய வேண்டும்.

நீர் நிலைகளில் கூட்டமாக இருக்கும் என்பவர்கள் வீட்டிலேயே ஒரு தாம்பாலம் வைத்து திதி கொடுக்க வேண்டிய முன்னோர்கள், காசி, கயா ஆகிய தலங்களை நினைத்துக் கொண்டு, எள்ளும் தண்ணீரும் இறைத்து விட்டு, சூரிய பகவானை நேக்கி, “இந்த எள்ளும் தண்ணீரும் முன்னோர்களை சென்று சேர வேண்டும். அவர்கள் நற்கதி அடைய வேண்டும். பித்ருலோகத்தில் உள்ள அவர்கள் சுகமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

முடிந்தவர்கள் பட்டினியாக இருந்து தை அமாவாசை விரதம் இருக்கலாம். முடியாதவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் எளிமையாக பால் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பகலில் முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு, படையலிட்டு, காகத்திற்கு சாதம் வைத்த பிறகு, இலை போட்டு சாப்பிட்டு, உணவு சாப்பிடலாம். அதற்கு பிறகு மாலையில் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ நல்லெண்ணெய் விட்டு அகல் தீபம் முன்னோர்களை நினைத்து ஏற்றி வழிபட வேண்டும்.

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளை இழந்த ஆண்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். மறைந்த மனைவிக்காக கணவர் தர்ப்பணம் கொடுக்கும் போது, அவருடன் சேர்ந்து அவர்களின் மகனும் தர்ப்பணம் கொடுக்கலாம். கணவரை இழந்த பெண்கள் பட்டினியாக விரதம் இருந்து கணவருக்கும், மறைந்த முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். அப்பாவிற்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால் மறைந்த தன்னுடைய தாத்தா, பாட்டிக்காக பேரன் தர்ப்பணம் கொடுக்கலாம். திருமணம் செய்யாமல் தனியாக இருக்கும் கன்னிப் பெண்கள் தன்னுடைய இறந்து போன தாய், தந்தைக்காக தர்ப்பணம் கொடுக்கலாம்.

தை அமாவாசை அன்று மற்றவர்களுக்கு அன்னதானம் வழங்குவதுடன் முக்கியமான மூன்று பேருக்கு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒன்று, நாம் கடவுளை அடைவதற்கு துணையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள் அல்லது பித்ரு தர்ப்பணம் செய்து வைப்பதற்காக இருக்கும் அந்தணர்கள் ஆகியோருக்கு சமைக்காத தானியங்கள், உணவுப் பொருட்கள், வஸ்திரம், முடிந்த அளவிற்கு பணம் வைத்து தானமாக கொடுக்கலாம். இரண்டாவது காகத்திற்கு சாதம் வைக்க வேண்டு. மூன்றாவதாக பசு மாட்டிற்கு தானம் வழங்க வேண்டும். பச்சரிசியை குலைவாக தண்ணீர் அதிகம் விட்டு சாதமாக செய்து, அதோடு கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை கலந்து பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version