தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் விஜய்க்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சருடன் சேர்த்து கே.ஏ. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

இந்தத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலுமே அமோக வெற்றி பெற்றார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் ஒரு வேட்பாளர் 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், தனது கோட்டையாகக் கருதப்படும் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விஜய்யின் இந்த ராஜினாமா கடிதத்தை, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்களான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான வெங்கட்ரமணன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் நேரில் வழங்கினர். திருச்சி கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version