கொடைக்கானலின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சியைத் தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு, குறிஞ்சி ஆண்டவர் முருகப் பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் கருவறை முதல் வளாகம் வரை மலர்களால் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு, ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முருகப் பெருமான் தங்கக் கவசத்தில் ஜொலிக்க, சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவையொட்டி கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே கோயிலில் திரண்டனர். தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, தியாவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப் பெருமானின் வரலாறு மற்றும் பக்திப் பாடல்களை அவர் இனிமையாகப் பாட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் மெய்சிலிர்த்து ரசித்தனர். மலர்களின் நறுமணம் சூழ, பக்திப் பாடல்கள் ஒலிக்க, கொடைக்கானல் மலைப் பகுதியில் வைகாசி விசாக விழா ஆன்மீகப் பரவசத்துடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்விற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
