அதிமுகவில் அதிகார மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், கட்சியின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் மட்டும் இக்கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது

கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களது மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானக் கடிதங்களை அவரிடம் நேரில் வழங்கினர். மேலும், அந்தந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு முழு ஆதரவு அளித்துக் கையெழுத்திட்ட படிவங்களையும் மாவட்டச் செயலாளர்கள் முறைப்படி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அறிவுரைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் சிலர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அரசியல் என்று வந்துவிட்டால் கட்சிக்குத் தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான்.

கட்சி எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் தொய்வில்லாமல், மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

கட்சியில் உள்ள குறைகளைக் களைந்து, அடிமட்ட அளவில் அதிமுகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாகத் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version