தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்போரை வரவேற்போம் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக்கழக சார்பில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து தலைவர் விஜய் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
