திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பிலோமினாள்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தூய பிலோமினாள் பள்ளி வாக்குச்சாவடி எண் 85-ல் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்தது. இந்த விபத்தினால் இயந்திரம் பழுதடைந்து செயலிழந்ததை அடுத்து, அந்த மையத்தில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இயந்திரம் பழுதான செய்தி பரவியதால், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். மாற்று இயந்திரம் கொண்டு வர தாமதமானதால், பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், புதிய இயந்திரத்தை பொருத்தி வாக்குப்பதிவை மீண்டும் தொடங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அமைச்சர் போட்டியிடும் தொகுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
