தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று (30) பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறையான அனுமதி பெறாமல் கூட்டத்தைக் கூட்டியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற காரணங்களுக்காக, பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக தவெக தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பிரச்சாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? மற்றும் விதிமீறல்கள் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகள் குறித்த முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
