உதகை அருகே உள்ள அவலாஞ்சி வன பகுதியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை நிற புலி மீண்டும் தென்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் அருகிலுள்ள அவலாஞ்சி வனப்பகுதி, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் இருப்பிடமாக விளங்குகிறது. அடர்ந்த காடுகள், அழகிய மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் பிரபலமான இடமாகும். தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவதால், வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா சமநிலைக்கு இடையே சவால்கள் எழுகின்றன.

2018-ம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் அவலாஞ்சிக்கு வந்தபோது, இரண்டு வெள்ளைப் புலிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் எடுத்த புகைப்படங்களை உடனடியாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் வனத்துறையினரை வியப்படையச் செய்தது. உடனடியாக 15-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் நவீன தானியங்கி கேமராக்களைப் பொருத்தி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இந்த கேமராக்களில் அந்த இரு வெள்ளைப் புலிகளுடன் மொத்தம் நான்கு புலிகள் நடமாடும் காட்சிகள் பதிவாகின.

இதன்பிறகு, வெள்ளைப் புலிகளின் நடமாட்டம் பதிவாகாததால், அவை வேறு வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதினர். 2021-ம் ஆண்டு அவலாஞ்சி மின் நிலையம் அருகே உள்ள மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் வெள்ளைப் புலிகள் நடமாடியதாக சில தகவல்கள் பரவின. எனினும், உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் அவலாஞ்சி வனப்பகுதியில் உள்ள மலையின் மீது ஒரு வெள்ளைப் புலி நடந்து செல்லும் காட்சியை உள்ளூர் மக்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வீடியோவில், முட்புதருக்கு அருகே நீண்ட நேரம் நின்ற புலி, பின்னர் மெதுவாக மலையைத் தாண்டிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளைப் புலி தென்பட்டிருப்பது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 2017-ம் ஆண்டு இரண்டு வெள்ளைப் புலிகள் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு வெள்ளைப் புலி மட்டுமே காணப்பட்டுள்ளது. மற்றொன்றின் நிலை என்ன என்பது குறித்து தெளிவில்லை. இயற்கை ஆர்வலர்கள், “மீதமுள்ள வெள்ளைப் புலியை உடனடியாக தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அதன் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர். வெள்ளைப் புலிகள் இயற்கையில் மிக அரிதானவை. அவற்றின் பாதுகாப்பு, நீலகிரியின் உயிர்ப் பன்மயத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வனத்துறை இந்தப் புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version