பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடராக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், டில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்தநிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில், கட்சியின் உறுப்பினராக இல்லாத முன்னாள் தலைவர் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதனால் அந்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அன்புமணி தரப்பில், கட்சி தன் வசம் தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதபதிகள், வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் வாதங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனர். பின்னர், ராமதாஸ் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
