பாமகவில் தந்தை மகன் மோதல் நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாமக உட்கட்சி பூசல், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையேயான மோதலால் தீவிரமடைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் நிலைமை மற்றும் கூட்டணி விவாதங்கள் கேள்விக்குறியாக உள்ளன. ஒவ்வொரு தேர்தல் களத்திலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பாமக தொடர்பான பேச்சு அதிக அளவில் அடிபடும். நீண்ட காலம் பேச்சுவார்த்தை நடத்தி தனக்கான இடங்களை, தான் இடம்பெறப்போகும் கூட்டணியிடம் பேசிப் பேசியே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்துவிடுவார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் உட்கட்சி பூசல் காரணமாக அன்புமணி தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராமதாஸ் தரப்பினர் திமுகவுடன் இணக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியிருக்கையில், கடந்த டிசம்பர் இறுதியில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் பதவிக் காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி, பாமகவின் பெயர் சின்னம் கொடியை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் ஆதரவாளரான டாக்டர் அருள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமைகள் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ராமதாஸ் ஆதரவாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version