சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளதாகவும் இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அமைப்புகள் வந்திருந்தனர் அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் கூறியதாகவும் பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய அவர் அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்றார்.

தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகள் உயர்த்தி வழங்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்தநிலையில் மக்களை கவரும் வகையில் அதிமுக அறிவிப்புகளை விட நல்ல வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும் மும்முரம் காட்டி வருகிறது.

இந்தநிலையில், இந்த அறிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் மகளிர் தொகை உயர்த்துவது, முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது, கல்விக் கடன் தொழில் கடன், முதியோர் உதவித்தொகை  உயர்வு உள்ளிட்டவைகள் பற்றி முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version