நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தணிக்கைச் சான்றிதழ் சிக்கலால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, நாளை (மார்ச் 17) மறுஆய்வுக்குழுவினர் பார்வையிட உள்ளனர்.
ஜன நாயகன் திரைப்படம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சுமார் ரூ.500 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம் முதலில் 2026 ஜனவரி 9 அன்று வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் மத்திய திரைப்பட தனிக்கை அமைப்பின் (CBFC) ஆய்வு குழு பரிந்துரையை ஏற்காததால் படம் வெளியீடு தாமதமானது. இதற்காக தயாரிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் உடன் செய்யப்பட்ட OTT ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பல நாட்களாகத் திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. படத்தின் சில காட்சிகள் அல்லது வசனங்கள் தொடர்பாகத் தணிக்கை வாரியத்திற்கும் படக்குழுவிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தப் படம் மறுஆய்வுக்குழுவின் (Revise Committee) பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, கடந்த மார்ச் 9-ம் தேதியே மறுஆய்வுக்குழுவினர் இந்தப் படத்தைப் பார்த்து இறுதி முடிவை அறிவிப்பதாக இருந்தது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர் ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அந்தத் தேதி தள்ளிப்போனது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், நாளை அதிகாரப்பூர்வமாக மறுஆய்வுக்குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்க உள்ளனர். படத்தின் அரசியல் உள்ளடக்கம் அல்லது சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் பகுதிகள் குறித்து நாளை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின்னர் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் சமகால அரசியல் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், தணிக்கை வாரியத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாளை சான்றிதழ் கிடைத்துவிட்டால், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் எனத் தெரிகிறது.
இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிமுறைகள் மே 4 வரை அமலில் இருக்கும். இதனால் அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள் தேர்தல் காலத்தில் வெளியாவதை தேர்தல் ஆணையம் பொதுவாக கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது.
உதாரணமாக 2019 பொதுத் தேர்தலின் போது விவேக் ஓப்ராய் நடித்த பிரதமர் நரேந்திர மோடி என்ற அவரின் பயோபிக் படம், ராம் கோபால் வர்மாவின் லட்சுமி-யின் என்டிஆர் படம், தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர ராவ்-ன் பயோபிக் படமான Udyama Simham உள்ளிட்ட சில அரசியல் திரைப்படங்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டது.
அதேபோல், தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது’ஜன நாயகன்’ திரைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு அதிகம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கூறுகிறது.

