பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்புபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-
தனியார் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் திலகவதி சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இவை பொதுவெளியில் பெண் ஒருவரின் மாண்பை குலைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட கருத்துகளை திமுகவில் நிர்வாகிகளாக இருக்கக் கூடிய சிலரும் பரப்பி வருகின்றனர்.
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக இப்படிப்பட்ட அருவெறுக்கத்தக்க கருத்துகள் பரப்பப்படுவதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பரப்பி வரும் நிர்வாகிகள் மீது திமுக தலைமை உடனடியாக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இதுபோன்ற குற்றச் செயலலில் ஈடுபட்டுவரும் அனைவர் மீதும் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
