தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் மேற்பார்வையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கடையிலிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல்குமார் (23) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அமுல்குமாரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அம்பலமானது. உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சட்டவிரோத விற்பனையில் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்ற மற்றொரு இளைஞரையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, அமுல்குமார் மற்றும் தானேஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்த வீரபாண்டி போலீசார், இவர்களின் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version