இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று (ஜூன் 2). இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. பாமர மக்களின் இதயத் துடிப்பையும், பட்டிதொட்டியெங்கும் உள்ள உணர்வுகளையும் தனது இசையால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞர். இசைஞானியின் திரையுலகப் பயணம் பற்றி ஒரு தொகுப்பை பார்க்கலாம்…
70-களின் மத்தியில் தமிழ் திரை இசையை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்ல தயாராக காத்திருந்தார் ஒரு இளைஞர். அந்நேரம் திரைப்படத் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான பஞ்சு அருணாசலம் ஒரு கிராமத்துக் கதையை உருவாக்கினார். அதற்கு மண்ணின் வாசம் மாறாத புதிய இசை தேவைப்பட்டதால், நாடக மேடைகளில் பின்னணி இசை அமைத்துக் கொண்டிருந்த ‘ராசையா’ என்ற இளைஞனை அழைத்தார். அவர்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முகவரியாக மாறிய இளையராஜா. நாடோடி இசையையும், கிராமிய மணத்தையும் தமிழ் சினிமாவில் அழுத்தமாகப் பதியச் செய்தார். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
80-களில் இளையராஜாவின் இசை, அசுர வேகம் எடுத்தது. கிராமிய மணமும், மேற்கத்திய கிளாசிக்கல் இசையும் கலந்த பல சூப்பர் ஹிட் ஆல்பங்களை வாரி வழங்கினார். தமிழ் சினிமா இசையின் போக்கையே மாற்றியமைத்தார் இளையராஜா. மேற்கத்திய இசையையும், இந்திய பாரம்பரிய இசையையும், தமிழ் மண்ணின் நாட்டுப்புற இசையையும் மிக நேர்த்தியாக இணைத்தார் இளையராஜா.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மேற்கத்திய பாணிப் பாடல்களில் ஒன்றாக மூடுபனி திரைப்படத்தில் “என் இனிய பொன் நிலாவே”, பயணங்கள் முடிவதில்லை படத்தில் “இளைய நிலா பொழிகிறது” உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் கிளாசிக் ரகம். முதல் மரியாதை திரைப்படத்தில் “பூங்காற்று திரும்புமா”, “வெட்டிவேரு வாசம்” என அனைத்துப் பாடல்களும் கிராமத்து இசையின் உச்சமாக அமைந்தது. “பாடறியேன் படிப்பறியேன்”, “மகா கணபதிம்” என்று கர்நாடக இசையை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த, சிந்து பைரவி படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது வழங்கியது இந்திய அரசு.
80-களின் பிற்பகுதியில் இளையராஜாவும், இயக்குநர் மணிரத்னமும் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் இசைப் பரிமாணத்தையே மாற்றின. மௌன ராகம், நாயகன், தளபதி உள்ளிட்ட படங்களின் திரைப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ஒரு மாஸ்டர்பீஸ். நாயகன் படத்தில் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்த உணர்ச்சிப்பூர்வமான பாடல் “தென்பாண்டிச் சீமையிலே” . தமிழ் சினிமாவில் ‘சிந்தசைசர்’ மற்றும் டிஜிட்டல் இசையின் புதிய அலையைக் கொண்டு வந்த ஆல்பம், அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் “ராஜா ராஜாதி ராஜா”, “நின்னுக்கோரி வர்ணம்” பாடல்கள்.
90-களில் இளையராஜா பல பிரம்மாண்டமான கமர்ஷியல் மற்றும் கிளாசிக் ஹிட்களைக் கொடுத்தார். கேளடி கண்மணி, இதயம், குணா, சின்னக்கவுண்டர், தேவர் மகன், மகாநதி, காதலுக்கு மரியாதை என பல திரைப்படங்களின் எவர்கிரீன் பாடல்களை அடுக்கிக் கொண்ட போகலாம். பாடல்கள் மட்டுமல்லாது, ஒரு திரைப்படத்தின் உணர்ச்சியைத் தன் பின்னணி இசையாலேயே கடத்துவதில் அவர் ஒரு மேதை. மௌன ராகம், நாயகன், தளபதி போன்ற திரைப்படங்கள் இதற்குச் சான்று.
ஆசியாவிலேயே முதன்முதலில் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனி அமைத்த பெருமை இளையராஜாவுக்கே உண்டு. மேலும், ‘திருவாசகம்’ பாடல்களுக்கு இவர் அமைத்த சிம்பொனி வடிவம் உலகத்தரம் வாய்ந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், சிறந்த இசை மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக 5 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் இசைஞானி. பத்ம விபூஷண் (2018), பத்ம பூஷண் (2010) போன்ற உயரிய விருதுகள் வழங்கி இசைஞானி இளையராஜாவை கவுரவித்துள்ளது இந்திய அரசு.
இசைக்கு மொழியில்லை என்பார்கள்; ஆனால் தமிழ் சினிமா இசைக்கு இளையராஜா தான் முகவரி. காதல், சோகம், பக்தி, உற்சாகம் என மனிதனின் அத்தனை உணர்வுகளுக்கும் தன் மெட்டுகளால் மருந்தளித்த இசை உலகின் ராஜா ‘இசைஞானி’ இளையராஜா.
